May 10, 2026

மாதம் ரூ.2000 வருமா? விஜய் பதிலே சொல்லலையே..

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். மக்களுக்கு வாக்குறுதியில் சொன்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று பொதுப்படையாக அவர் அறிவித்திருந்தாலும், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான கல்வி உதவித்தொகை திட்டங்களான ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ குறித்து அவர் மௌனம் காப்பது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஆகியவை தி.மு.க அரசின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்டன. இந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில், அதாவது தற்போதைய சூழலில், ஆயிரக்கணக்கான மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த உதவித்தொகை வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வேளையில், இந்தத் திட்டங்களுக்கான நிதி விடுவிப்பு குறித்துப் புதிய அரசிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் தங்களின் அடுத்த மாத கல்விச் செலவு மற்றும் இதரத் தேவைகளுக்குப் பணம் கிடைக்குமா என்ற கவலையில் உள்ளனர்.

பதவியேற்றவுடன் கோட்டைக்குச் சென்ற முதல்வர் விஜய், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார். இது வரவேற்கத்தக்க மாற்றமாக இருந்தாலும், மாணவர்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடைய கல்வி உதவித்தொகை குறித்த கோப்புகள் எதையும் அவர் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்த விதம் குறித்துத் தேர்தல் பிரச்சாரங்களின்போது பலமுறை விவாதிக்கப்பட்டது. “மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அரசியலுக்காக முடக்க மாட்டோம்” என்று மேடைக்கு மேடை முழங்கிய விஜய், தற்போது நடைமுறையில் அந்தத் திட்டங்களைத் தொடர்வதில் ஏன் தாமதம் காட்டுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி.மு.க அரசு கொடுத்த 1,000 ரூபாய் எங்களுக்குப் பெரிய உதவியாக இருந்தது. இப்போது ஆட்சி மாறியதும் இந்தத் திட்டம் நின்றுவிடுமா என்று பயமாக இருக்கிறது. இந்த வாரம் பணம் வந்திருக்க வேண்டும், ஆனால் இதுவரை எந்தத் தகவலும் இல்லை” – மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கவலையைத் தெரிவித்தார். இதேபோல், ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் பெற்றோர்களும், புதிய அரசு தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தெளிவுபடுத்த வேண்டியது என்ன? ஒரு அரசு மாறினாலும், முந்தைய அரசு மக்களுக்காகக் கொண்டுவந்த நலத்திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மரபு. குறிப்பாக, கல்வி சார்ந்த நிதி உதவிகள் நிறுத்தப்பட்டால் அது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கக்கூடும். முதல்வர் விஜய் தனது அடுத்தடுத்த அறிவிப்புகளில் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ திட்டங்களின் நிலை குறித்துத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். இந்தத் திட்டங்கள் பெயர் மாற்றப்படுமா? அல்லது புதிய வடிவத்தில் வருமா? அல்லது முற்றிலும் கைவிடப்படுமா? என்ற குழப்பத்திற்கு விடை கிடைத்தால் மட்டுமே லட்சக்கணக்கான மாணவர்கள் நிம்மதி அடைவார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த ‘வெற்றிக் கழக’ அரசு காட்டும் செயல்பாடே அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.