தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
முதல்வர் ஸ்டாலின் மீது விமர்சனம்
விஜய் பேசியதாவது, “தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறாய், உறுதிமொழிகளை கொடுக்கிறாய். ஆனால், ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு எளிமையாக ஒன்றை கூறிக் கொள்கிறேன். இதுபற்றி ஒரு விஷயத்தை நான் சமீபத்தில் முழுமையாக தெரிந்து கொண்டேன்.
நம் மாநிலத்துக்கான மொத்த பட்ஜெட் 4.39 லட்சம் கோடி. இதில் 30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கே செல்கிறது. இதென்ன புது வரி என கேட்கின்றீர்களா?
“இந்த பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கும் நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சாருக்கு செல்கிறது. மீதமுள்ள 10 சதவீதம் அவரது மந்திரிகளுக்கு செல்கிறது. மொத்தம் 30 சதவீதம் ஆகிவிட்டதா? அரசாங்கத்திற்கு தான் வரி கொடுப்பார்கள்.
அரசாங்கமே ஒருவருக்கு வரி கொடுக்கிறது என்றால், அதற்கு பெயர் ஸ்டாலின் சார் வரி தானே. இதைவிட நீங்கள் அறிவிக்கும் கொள்ளையை நாகரீகமாக சொல்ல முடியாது” என்று விஜய் சாடினார்.
ஸ்டாலின் சார் வரி
மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை நீங்கள் அப்படியே சைடில் ஒதுக்காமல், மொத்த பணத்தையும் மக்களுக்கே செலவு செய்துவிட்டால் ஒரு சூப்பரான நல்ல அரசாங்கத்தை கொடுக்க முடியும். அரசாங்கத்தில் காசு இல்லை என்று கூறிக்கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் விடியற்காலையில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 5000 செலுத்தியுள்ளார்களே அது எப்படி? ரூ. 2000, ரூ. 3000 மற்றும் ரூ. 4000 செலுத்துகின்றீர்களே, எப்படி? என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தில் பணம் இருக்கிறது, பற்றாக்குறை தான் காரணம். அந்த பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்றால் இந்த மாதிரி ஸ்டாலின் சார் வரி தான். இதை ஒழித்தாலே போதும், எல்லாமே தானாக நன்றாக நடக்கும்,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.






