September 10, 2026

மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு அபாயம்? தமுக்கம் வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபர் ஒதுக்கீடா?

கோயில் நகரமான மதுரையின் இதயப்பகுதியான தமுக்கம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிகவளாகக் கடைகளைத் திரும்ப ஒப்படைப்பதில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையாளர் விதிகளின்படி செயல்படுவாரா? அல்லது தனிநபர் அழுத்தங்களுக்குப் பணிவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்னணி என்ன?

​மதுரை தமுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது, அமெரிக்கன் கல்லூரி அருகில் இருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான பழைய வணிகவளாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி பாலம் அமைக்கும் பணிக்காக இடிக்கப்பட்டது. இதனால் அங்கு பல ஆண்டுகளாக வணிகம் செய்து வந்த கடைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

வாடகை பாக்கி விவகாரம்

​தற்போது மேம்பாலப் பணிகள் முடிந்து போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னதாக அங்கு கடை வைத்திருந்த சில வணிகர்கள், தங்களுக்கு மீண்டும் அதே இடத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இடிக்கப்பட்ட கடைகளில் முன்பு வணிகம் செய்தவர்கள் முறையாக வாடகை செலுத்தாமல் பெரும் தொகையை பாக்கி வைத்திருந்ததாகப் புகார்கள் உள்ளன. தற்போது, அவர்கள் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியைச் செலுத்திவிட்டு, “நாங்கள் பணத்தைக் கட்டிவிட்டோம், எங்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என வாதிடுகின்றனர்.

மதுரை மாநகராட்சி ஆணையர்

அதிகாரிகளின் தெளிவான விளக்கம்

​இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:​ “குறிப்பிட்ட நபர்கள் தற்போது செலுத்தியுள்ள பணம், அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய கடைக்கான வாடகை பாக்கி மட்டுமே. இது புதிய கடைகளைப் பெறுவதற்கான முன்பணம் அல்ல. வணிகவளாகக் கடைகளைப் பொறுத்தவரை, அரசு விதிகளின்படி பொது ஏலம் விடுவதுதான் முறை. அதுவே மாநகராட்சிக்குத் தகுந்த வருவாயைத் தேடித்தரும் வழி.”

சட்ட நடைமுறை என்ன?

​தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி விதிகளின்படி, பொதுச் சொத்துக்களைக் குத்தகைக்கு விடும்போது வெளிப்படையான பொது ஏலம் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிகத் தொகைக்கு ஏலம் எடுப்பவருக்குக் கடையை ஒதுக்கினால் மட்டுமே மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.என கூறப்படுகிறது ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மதுரை மாநகராட்சிக்கு, இது போன்ற ஏலங்கள் மிக முக்கிய வருவாய் ஆதாரமாகும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

​இந்த விவகாரத்தில் சிலர் செல்வாக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விதிகளுக்குப் புறம்பாகக் கடைகளைத் தனக்குச் சாதகமாக ஒதுக்கீடு செய்ய அதிகாரிகளுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. பொது ஏலம் விடாமல் கடைகளை ஒதுக்க முயற்சிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது ஏலம் விடப்பட வேண்டும்: தனிநபருக்கு முன்னுரிமை அளிக்காமல், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் பொது ஏலம் நடத்தப்பட வேண்டும்.என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

​வருவாய் பாதுகாப்பு

மாநகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது. என கூறுகின்றனர்.

​ஆணையரின் முடிவு

மதுரை மாநகராட்சி ஆணையாளர் சட்டத்திற்குப் புறம்பான அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், விதிகளின்படி ஏல அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
​தமுக்கம் வணிகவளாகக் கடைகள் பொது ஏலத்திற்கு வருமா? அல்லது தனிநபர்களின் பிடிக்குள் சிக்குமா? மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்

You may have missed