September 10, 2026

டெல்லி தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று இரவு முதலே கொண்டாட்டங்கள் களைகட்டி விட்டன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அப்போது மோடிக்கு பாதிரியார்கள் ஆசி வழங்கினர். அத்துடன் பிரதமர் மோடிக்கு சிறப்பு பிரார்த்தனை, பாடல்கள் பாடப்பட்டன. தேவாலயத்தில் இருந்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், ” டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்து கொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed