September 10, 2026

ஆயிரக்கணக்கானோர் எழுதும் குரூப்2/2A தேர்வில் முறைகேடா..? முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுதும் குரூப்-2/2A போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்தும், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது, திமுக ஆட்சியில் “நிர்வாகம்” என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. குரூப்-2/2A போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுவும்,  பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன, “Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் என்று

அந்த Fault-ற்கு  பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை “சூப்பர்ஸ்டார்” மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே – ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.

ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

You may have missed