அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 17) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,” இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேற்கு- வடமேற்கு திசையில் நகர இருக்கிறது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 22-ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
