September 10, 2026

டெல்லியில் கார் குண்டு வெடித்து 10 பேர் பலி- அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நேற்று இரவு 6.50 மணியளவில் காரில் குண்டு வெடித்தது. டெல்லியின் பரபரப்பான பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது 14 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி குண்டு வெடிப்பு சம்பவ இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன. இந்த குண்டு வெடிப்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளே டெல்லி தாக்குதலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியாணாவில் கைப்பற்ற சுமார் 2,500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் பெரும் தாக்குதல் நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற  சந்தேகம் எழுந்துள்ளது.  மேலும் டெல்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தவும் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். இந்த கார் ஹரியாணாவைச் சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

You may have missed