அதிர்ச்சி… சூடானில் மசூதி மீது டிரோன்கள் மூலம் தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழுகையின் போது மசூதியில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல் பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்து ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல் பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவக்குழுவான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் குழுவிற்கும் (ஆர்எஸ்எஃப்) இடையே ஏற்பட்ட மோதல் ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 மில்லியன் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடக்கு டொர்ப் மாகாணம் எல் பெஷர் நகரில் மசூதியில் நேற்று தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது துணை ராணுவத்தினர் திடீரென டிரோன்கள்  மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் வழிபாட்டில் இருந்த 70 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சூடானில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் குறைந்தது 3,384 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் டொர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏப்ரல் தொடக்கத்தில், வடக்கு டொர்ப் மாகாணத்தில் ஆர்எஸ்எஃப் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அருகில் உள்ள ஜம்சாம் இடப்பெயர்வு முகாமை கைப்பற்ற நடந்த மிப்பெரிய தாக்குதலில் அவர்களில் பெரும்பாலனோர் கொல்லப்பட்டனர். எல் பெஷர்  மீது தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படும் ஒரு ஆர்எஸ்எஃப் ராணுவ தளமாக இந்த முகாம் மாற்றப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.