September 10, 2026

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம்.அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும், இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை.

மு.க.ஸ்டாலின் அவர்களே, அன்றைக்கு சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே அழைந்தீர்கள். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது நீங்கள் எப்படி அழைவீர்கள் என்று தெரியவில்லை.இன்றைக்கு எதிர்க்கட்சிகளும், ஏன் திமுகவால் கூட அதிமுக ஆட்சியை குறைசொல்ல முடியவில்லை. பொற்கால ஆட்சியை கொடுத்தோம். அதே ஆட்சி மீண்டும் அமைய நீங்கள் அத்தனை பேரும் உதவ வேண்டும். இங்குள்ளவர்கள் நினைத்தால் நிச்சயம் அது நிறைவேறும். நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்” என்றார்.

 

You may have missed