பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (47). அதிமுக தொண்டர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால், மனமுடைந்த மாரிக்கண்ணன், தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் மனமுடைந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (47). அ.தி.மு.க-வின் தீவிரத் தொண்டரான இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு வேலம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. எதிர்பார்த்த இடங்களைக் கைப்பற்றத் தவறியதுடன், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலும் அக்கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்தார்.
தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கண்ணன், அ.தி.மு.க-வின் பின்னடைவாலும், சொந்தத் தொகுதியின் தோல்வியாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரிக்கண்ணன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பிள்ளைகள், தந்தை சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறினர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர், விரைந்து வந்து மாரிக்கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் தோல்விக்காகத் தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
நாளை தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு? – இன்று ஆளுநருடன் சந்திப்பு
ஓட ஓட விரட்டி வக்கீல் படுகொலை: தங்கை தற்கொலையால் மைத்துனர் வெறிச்செயல்..
முடிவுக்கு வந்த மும்மூர்த்திகளின் அரசியல் வாழ்க்கை.. இனி மதுரையில் அதிமுகவால் சமாளிக்க முடியுமா?