திருச்சியில் போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி: சிக்கிய காதலன், நண்பர்… 

திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள தனியார் விடுதியில் கணவன் – மனைவி எனக் கூறி திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணான யாஸ்மின் மற்றும் 19 வயது சதாம் ஹுசைன் ஆகியோர் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

மாலை யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி சதாம் உசேன் தனது நண்பரான ஷேக் அப்துல்லாவை வரவழைத்து, யாஸ்மினை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாஸ்மீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் யாஸ்மின் மரணம் தொடர்பாக சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த யாஸ்மின் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் போதை ஊசி செலுத்தும் பழக்கம் இருந்ததாகவும், ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய இருவரும் போதை ஊசி செலுத்திக்கொண்ட நிலையில் யாஸ்மினுக்கு அதிக அளவிலான ‘டிபன்டாடல்’ என்ற போதை ஊசி செலுத்தப்பட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு, 7 போதை மாத்திரை அட்டைகள், நீரில் கலக்கிய நிலையில் இரண்டு டீ கப் போதை மருந்து, ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் சதாம் உசேன், ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பான தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக யாஸ்மின் சிறுமியாக இருந்த போது சதாம் உசேன் அவரை காதலித்து வந்துள்ளார். அப்போது யாஸ்மீனின் தாயார் சதாம் உசேன் மீது அளித்த புகாரின் பேரில் அவர் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கும் சென்று இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு யாஸ்மினும் சதாம் உசேனும் காதலைத் தொடர்ந்து வந்துள்ளனர். யாஸ்மின் கேட்டரிங் நிறுவனத்தில் அவ்வப்போது வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அந்த வகையில் அண்மையில் தனது தாயாரிடம் கேட்டரிங் வேலைக்காக வெளியூர் செல்வதாகவும், திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என கூறிவிட்டு காதலன் சதாம் உசேன் உடன் வேளாங்கண்ணி உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். திருச்சி வந்த அவர்கள் இருவரும் ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

யாஸ்மினின் தாயாரான ஷகீலா பேகம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருபவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்தே யாஸ்மின் போதை மாத்திரைகளை எடுத்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாஸ்மீனின் தயாரான ஷகீலா பேகமும், அவரது மகனான ஜாகிர் உசேனும் ஏற்கனவே போதை மாத்திரை விற்பனை செய்ததாக அறியமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர்கள் என்ற தகவலும் தெரியவந்தது. யாஸ்மினும் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எனவே இவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக யாஸ்மினின் தயாரான ஷகீலா பேகம் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாஸ்மினின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள இருவர் மற்றும் யாஸ்மினின் தாயார் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணையில் போதை மருந்து விற்பனை கும்பல் பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.