September 11, 2026

SIR படிவங்களை நிரப்புவதில் சந்தேகம்…8 நாட்களுக்கு வாக்காளர் உதவி மையங்கள் ரெடி!

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்கு சென்னை மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) உதவி மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.