திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு

வரதட்சணைக் கொடுமையால் மரணமடைந்த ரிதன்யாவின் (Rithanya) பெற்றோர், தங்களின் மகளின் மரணத்திற்கு முறையான நீதி கேட்டு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்குக் கண்ணீர் மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

தங்களின் மகள் இறந்து 11 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை தங்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வேளையில், தங்களைப் போன்ற பெற்றோர் பிள்ளையைப் பறி கொடுத்துவிட்டு வீதிகளில் தவித்து வருவதாகவும் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவினாசி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சருமான எஸ்.கமலி-யிடம் மனு கொடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாட்களிலேயே காருக்குள் விஷம் குடித்து உயிரிழந்த புதுமணப் பெண் ரிதன்யா ஆவார். இந்த வழக்கில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தக் கோரி, ரிதன்யாவின் பெற்றோர் தமிழக வெற்றிக் கழகத்தின் அவினாசி சட்டமன்றத் உறுப்பினர் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான எஸ்.கமலி நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அவினாசி தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.கமலி அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இந்த கோரிக்கை மனுவை நேரடியாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளார்

முதலமைச்சரின் நேரடித் தலையீட்டின் மூலம் மட்டுமே தங்களின் மகளின் மரணத்திற்குச் சரியான நீதி கிடைக்கும் என்று ரித குடும்பத்தினர் முழுமையாக நம்புகின்றனர்.

தங்கள் மகள் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் (11 மாதங்கள்) ஆகப்போகும் நிலையிலும், இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் இதுவரை தங்களைச் சரியாக விசாரிக்கவே இல்லை என்று ரிதன்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்துப் பேசிய ரிதன்யாவின் தாயார், “நாங்கள் எல்லா பக்கமும் அலைந்து ஓடிவிட்டோம், ஆனால் எங்களை யாரும் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் சரியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், மிகப்பெரிய இழப்பையும் தீராத மன வருத்தத்தையும் நாங்கள் இன்று வரை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இது சாதாரண மரணம் அல்ல, தனது மகளைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளனர் என்று செய்தியாளர்கள் பேட்டிய அளித்த போது ரிதன்யாவின் பெற்றோர் கதறினர், தங்கள் மகள் ரிதன்யா உயிருடன் இருந்தபோது வைத்திருந்த பணம், நகைகள் மற்றும் வரதட்சணையாகக் கொடுத்த அனுப்பப்பட்ட கார் உள்ளிட்ட எந்தவொரு பொருளையும் இதுவரை காவல்துறை மீட்டுத் தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். “என் பிள்ளையின் பொருட்கள் எதுவும் இன்னும் எங்களிடம் திரும்பி வரவில்லை. என் பிள்ளையை இழந்துவிட்டு நான் இங்கே பைத்தியக்காரனைப் போலப் பரிதவித்து நின்று கொண்டிருக்கிறேன். ஆனால், என் மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியில் மிகவும் சுற்றித் திரிகிறார்கள்” என்று ரிதன்யாவின் தாயார் அழுதுகொண்டே கூறியுள்ளார்