திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலமாக மீட்பு…

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் சிசு ஒன்று வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூரில் தங்கியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மற்றும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் 90% மேற்பட்டோர் சிகிச்சைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாடுகின்றனர்.

குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் நூறுகணக்கான கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மகப்பேறு சிகிச்சை பிரிவின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழிவுநீர் தொட்டியை பார்த போது தொட்டிக்குள் பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் சிசு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிசு அந்த மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையா? அல்லது வெளியிலிருந்து கொண்டு வந்து வீசப்பட்டதா? இந்த கொடூர செயலில் ஈடுபட்டது யார் ? என்று மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.