ஓமன் நாட்டில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்த மாலுமி நிஷாந்த்தின் குடும்பத்தினரை சந்தித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆறுதல் கூறியிருந்ததுடன், உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இந்தசூழலில் தான், நிஷாந்தின் மனைவி சாரோபினுக்கு கருணை அடிப்படையில் மீன்வளத்துறையில் அரசு வேலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடல்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓமன் நாட்டுக்குச் சொந்தமான ”எம்.டி செலஸ்டியல்” என்ற எண்ணெய் கப்பலில் இரண்டாம் நிலை (Second Officer) அதிகாரியாக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் என்ற மாலுமி கடந்த ஜூன் 11-ம் தேதி உடல்நலக்குறைவு உயிரிழந்தார்.
முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காததாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும், நிஷாந்த் உயிரிழந்ததாக இந்திய மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் சங்கமான எப்.எஸ்.யூ.ஐ (Forward Seamen’s Union of India) குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இறந்த மாலுமி நிஷாந்தின் உடலை 3 நாட்களுக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது மாலுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சரோபின் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இந்தசூழலில் தான், நேற்று காலை நிஷாந்தின் மனைவி சாரோபின் மற்றும் குடும்பத்தினரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரது உடலை உடனடியாக தாயகம் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், அவரது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிசாந்தின் மனைவியிடம் தெரிவித்திருந்தார்.

More Stories
வாயுக் கசிவு விபத்து| ’23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..’
மகனின் கண் முன் பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம்:
மீன்பிடிக்கும் தகராறில் வாலிபரை துப்பாக்கியால் தாக்கிய போலீஸ் உடனடி சஸ்பெண்ட்…