September 10, 2026

மாமல்லபுரத்தில் போர்வெல் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு…

மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியின்போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதற்காக கிணற்றுக்குள் செலுத்தப்பட்டிருந்த நீளமான இரும்புக் கம்பியை இயந்திரத்தின் உதவியுடன் மேலே எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரும்புக் கம்பி எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மின்சாரம் பாய்ந்து கம்பியைப் பிடித்திருந்த மாமல்லபுரம் மீனவர் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா (48), கடும்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (52), நெய்குப்பியைச் சேர்ந்த பிரபு (33), மாமல்லபுரம் அம்பாள் நகரைச் சேர்ந்த பாலாஜி (எ) வெங்கடேசன் (22) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு தொழிலாளியான காரணை கிராமத்தைச் சேர்ந்த பகவான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர் களின் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed