மதுரையில் தனியார் பேருந்துகளின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மேலூர் முதல் மதுரை வரை செல்லும் பேருந்துகளுக்கு முன்பு ரூ.15 ஆக இருந்த டிக்கெட் விலை இப்போது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்ற இந்த கட்டண உயர்வு, அன்றாடம் பயணம் செய்யும் ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
மேலூர் பகுதியைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்பு ரூ.15க்கு பயணம் செய்தவர்கள் இப்போது ரூ.20 செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது அவர்களின் அன்றாட செலவுகளை அதிகரித்து, குடும்ப பட்ஜெட்டை பாதித்துள்ளது. “விலைவாசி ஏறிக்கொண்டே போகும் நிலையில், பேருந்து கட்டணமும் உயர்த்தப்படுவது ஏழை மக்களை மேலும் பாதிக்கிறது” என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசின் தலையீடு தேவை மேலூர் பகுதியை சேர்ந்த மருதுபாண்டியன், இந்த விலை உயர்வுக்கு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. அரசு இதில் தலையிட்டு, மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார். மதுபாலன் எனும் தினக்கூலி தொழிலாளர், “முன்பு ரூ.15 ஆக இருந்த டிக்கெட் இப்போது ரூ.20 ஆகிவிட்டது. இது எங்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. அரசு இந்த விஷயத்தை கவனித்து சரி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்
டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வை அமலாக்கம் செய்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அரசு பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருந்தாலும், அனைத்து நேரத்திலும் அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால் தனியார் பேருந்துகளை நம்பியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் அதிக கட்டணம் என்பது மக்களுக்கு சுமையாக மாறுகிறது. அடுத்த பிரச்சனை என்னவென்றால் இந்த கட்டண உயர்வை அடுத்தடுத்து அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களும் நடைமுறைப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…
கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை: