4 பெண்களுடன் திருமணம்: 4வது மனைவியின் மகனை கொன்ற கல்யாண மன்னன்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்னுடையார்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபிரபு (33). கூலித் தொழிலாளி. இவர், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை திருமணம் செய்தார். அந்த பெண் இவரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து நாகபிரபு இன்ஸ்டாகிராம் மூலம் 2வதாக ஒரு பெண்ணுடன் பழகி அவரை திருமணம் செய்தார். சில மாதங்களில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல, இன்ஸ்டா மூலம் பழகி 3வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவரும் சில நாட்களில் நாகபிரபுவை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், இதே பாணியில் அந்தமானை சேர்ந்த சோனியா (26) என்ற பெண்ணுடன் நாகபிரபு பழகினார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி சித்தார்த் (6) என்ற மகன் இருந்தான். சோனியா அந்தமானில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வந்தார்.

சின்னுடையார்வலசை கிராமத்தில் நாகபிரபுவுடன் வசித்து வந்தார். இவரை நாகபிரபு 4வதாக திருமணம் செய்து கொண்டார். நாகபிரபு அக்காள் வீடு மண்டபம் அருகே சுந்தரமுடையான் கிராமத்தில் உள்ளது. இங்கு சோனியா தங்கியிருந்தார். இவரது மகன் சித்தார்த் சின்னுடையார்வலசையில் நாகபிரபுவுடன் வசித்து வந்தான். சில தினங்களுக்கு முன் சிறுவன் சித்தார்த் வீட்டின் அருகே உள்ள கிணற்று நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினான்.

அவனை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 10 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தான். இதுகுறித்து சிறுவனின் தாய் சோனியா உச்சிப்புளி போலீசில் புகார் அளித்தார். இதில், தனது மகனை நாகபிரபு கிணற்றில் வீசி கொன்றிருக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து நாகபிரபுவை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.