மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி அதிரடி கைது…

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி சரசு (80). இவர் கடந்த 29ம்தேதி இரவு நத்தப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர், பாட்டி என்னுடன் வண்டியில் வாருங்கள்… உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன்… எனக் கூறி அவரை பைக்கில் ஏற்றிச் சென்று வீட்டில் இறக்கி விட்டுள்ளார்.

பின்னர் அந்த பாட்டி வீட்டுக்குள் சென்ற நிலையில் அவர் தனிமையில் இருப்பதை அறிந்து கொண்ட வாலிபர், பின்தொடர்ந்து சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுத்துவர சமையலறைக்கு சென்றபோது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் திடீரென மூதாட்டி சரசு அணிந்திருந்த தங்க செயின், வளையலை பறித்ததோடு, அவர் காது, மூக்கில் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியையும் கழட்டித் தருமாறு மிரட்டியுள்ளார்.

அவர் தர மறுத்த நிலையில் கொலை செய்து விடுவேன் என மிரட்டிய அந்நபர், காதில் இருந்த தோடையும் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்தனர். பின்னர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் துப்புதுலங்கியது.

அதன்பேரில் நெல்லிக்குப்பம், வாழப்பட்டு மெயின் ரோட்டில் வசிக்கும் கோவிந்தராஜ் மகன் அருண்மொழிதேவனை (35) கைது செய்த போலீசார் அவரிடமிந்து 2 கிராம் மூக்குத்தியை பறிமுதல் செய்தனர். மற்ற வழிப்பறி சம்பவங்களிலும் இவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பாஜ நிர்வாகியான அருண்மொழித்தேவன், அப்பகுதியில் சிமென்ட் கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.