சேலத்தில் நாளை தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
நாளை சேலத்தில் விஜய்
சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
முக்கிய நிபந்தனையாக அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம், தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
உணவு ஏற்பாடு
அதில் தெரிவித்திருப்பதாவது, ”மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி, நாளை, சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

நிகழ்ச்சியை டிவி-யில் பாருங்க!
அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






