பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம்- கிராமம் கொடுத்த பகீர் தண்டனை!

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் அவரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தேவம்பிர் கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சைமன் டிர்கி(56) என்பவரை கிராம மக்கள் பிடித்தனர். அவருக்கு செருப்பு மாலை போட்டு கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பின் அறையில் வைத்து அவரை தாக்கினர். இதன்பின் அவரை அந்த அறையில் பூட்டி வைத்து விட்டுச் சென்றனர். மறுநாள் காலை அந்த அறையை திறந்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த தகவல் அறிந்த சோனுவா காவல் நிலைய போலீஸார், அடித்து கொலை செய்யப்பட்ட சைமன் டிர்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாய்பாசா சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சக்ரதர்பூர் துணைப்பிரிவு காவல் அதிகாரி சிவம் பிரகாஷ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சைமன் டிர்கி குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சைமன் மீது பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். இந்த இரண்டு புகார்களையும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இந்த சம்பவத்தால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னால், யாராவது தூண்டி விட்டார்களா அல்லது கோபத்தின் வெளிப்பாடாக இந்த சம்பவம் நடந்ததா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *