சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மானியக்கோரிக்கை விவாதங்களுக்காக இன்று கூடிய இந்த கூட்டத்திற்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் கூடியுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில், விவாதிக்க வேண்டிய பொருள், அதில் பங்கேற்பவர்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார்.
இன்று காலை சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.


