விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற பின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் தவெக கொடிகளுடன் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால், அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “கரூர் துயரச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. இன்னொரு கட்சியை தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால் இப்படியொரு கொடுமையான துயர சம்பவம் நடந்துள்ள நிலையில், கூட்டணி குறித்து பேசுவது தர்ம சங்கடத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது. தன் கட்சி தொண்டர்களை வைத்தே பிரச்சாரக் கூட்டங்களில் தவெக கொடியை எடப்பாடி பழனிசாமி தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் .
விஜய் தனது தலைமையில் தான் கூட்டணி என மதுரை மாநாட்டிலேயே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எடப்பாடியின் இந்த நடவடிக்கை, விஜய்யின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அதிமுக பலவீனமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.
தவெக தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். ஏற்கெனவே கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டார். எடப்பாடிக்கு துரோகத்தை தவிர வேறு ஒன்று கிடையாது. விஜய் கூட்டணி வருவார் என்றால் பாஜகவை கழற்றி விட தயாராக உள்ளார். ஆனால் விஜய் கூட்டணிக்கு வருவாரா என்று தெரியாது.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார்? அதிமுக, பாஜக கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. எப்போது எடப்பாடி பழனிசாமியை தங்கள் கூட்டணியை சேர்த்தார்களோ அப்போது முதல் அந்த கூட்டணி பலமிழந்து வருகிறது. இக்கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும். இதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.


