ராமநாதபுரம்: கஞ்சா வியாபாரிகளால் கொலை மிரட்டல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி..

ராமநாதபுரம் அருகே கஞ்சா வியாபாரிகளால் தொடர் அச்சுறுத்தல் இருப்பதால் நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள், ஒரு பெண் உட்பட 4 பேர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவை சேர்ந்த மீனவர் பைரோஸ் கான், இவரது மனைவி ஆயிஷா பீவி (45)இவரின் தம்பி ஜலில் (40) மற்றும் 17 வயது மகன், 11 வயது மகள் ஆகிய 4 பேருடன் இன்று காலையில் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர்.

அப்போது நுழைவாயில் பகுதியில் நான்கு பேரும் மறைத்து வைத்து கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜலில் கூறும்போது; திருப்பாலைக்குடியில் மீனவர்களை குறி வைத்து உள்ளுரை சேர்ந்த சிலர், இலங்கை அகதிகள் என 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று கஞ்சா வியாபாரம் செய்து வருகிறது. இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசில் புகார் தெரிவிக்க தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தான் புகார் தெரிவித்தோம் எனக்கூறி அந்த கும்பல் எங்களை தொடர்ந்து மிரட்டல் விடுத்தும், தாக்குதல் நடத்தியும் வருகிறது.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் ராமநாதபுரம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கஞ்சா கும்பலை கைது செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தீ குளிக்க முயன்றவர்கள் மீது அங்கு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.