ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சியில் தங்கி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 1-ம் தேதி வந்திருந்தார். ரயில் புறப்படும் நேரம் வரை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்
அதிகாலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர், தாயருகே தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தோளில் தூக்கிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். இதைப் பார்த்து சந்தேகமடைந்த அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர், இதுகுறித்து யானைக்கவுனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து விசாரித்ததில், சிறுமி கடத்திச் செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியை மீட்டு, கடத்திச் சென்ற நபரை பிடித்து விசாரித்ததில் கடத்தியவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த பெயின்டர் சசிகுமார் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆட்டோ ஓட்டுநரான பெரியமேட்டைச் சேர்ந்த முருகனின் (45) சாமர்த்தியத்தால் சிறுமி கடத்தல் தடுக்கப்பட்டது.
மேலும், குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். இதையறிந்த டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், நேற்று டிஜிபி அலுவலகத்துக்கு முருகனை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதுகுறித்து டிஜிபி கூறுகையில், ‘ஆட்டோ ஓட்டுநர் முருகனின் துரிதமான நடவடிக்கை மற்றும் பொதுநல அக்கறை ஒருசிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. மேலும், குற்றம் நடைபெறுவதை தடுக்கவும் உதவியுள்ளது.
அவரது செயல், பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் காவல் துறையினருடன் இணைந்த ஒத்துழைப்பு சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக் காட்டும் சிறந்த முன்னுதாரணமாகும்’ என்று தெரிவித்தார்

More Stories
மாறப்போகும் வைகை கரை… ₹79.26 கோடி மதிப்பில் மாநகராட்சியின் மெகா திட்டம்…
திருவாரூர் அருகே குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்…
கோவையில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்: