கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கௌதம் என்பவருடன் 2019ம் ஆண்டில் திருமணம் ஆகி 2023ல் கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடம் இருந்து பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த பெண் சூலூர் கலையரங்கம் பின்புறம் உள்ள ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் பக்கத்து ரூமில் தங்கி இருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர் அந்த பெண்ணுடன் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளார். இளம்பெண்ணின் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக அந்தோணி மரிய ராபின் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண் அந்தோணி மரிய ராபினுடன் கடந்த ஒரு வருடமாக தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தோணி மரிய ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதனால் இருவரும் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் அந்தோணி மரிய ராபின் அவரது நண்பர் கிரீஸ் சாமுவேல் குமார் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த பெண்ணுடன் சமாதானம் செய்ய பேசிக்கொண்டே இருந்துள்ளனர். அப்போது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜூஸ் குடித்தபின் மயக்கமடைந்த அந்த பெண்ணை இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கம் தெளிந்து அந்த பெண் கேட்டபோது அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரீஸ் சாமுவேல் குமார் ஆகியோர் தாங்கள் பாலியல் உறவு கொண்டதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறி மிரட்டியுள்ளனர்.
மேலும், அந்தோணி மரிய ராபினை திருமணம் செய்ய வேண்டும் என்று டார்ச்சர் செய்தால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவோம் என்றும், இது தொடர்பாக புகார் தெரிவித்தால் மகனுடன் கொலை செய்து விடுவதாகவும் இருவரும் மிரட்டியுள்ளனர். இது குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றிரவு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் நல்லம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் தேவராஜ் என்பவரின் மகன் அந்தோணி மரிய ராபின் (28), திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் சாமுவேல் குமார் (30) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று இருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அந்தோணி மரிய ராபினை வலைவீசி தேடி வருகின்றனர். கோவையில் தொடர் கூட்டு பலாத்காரம், கொலை சம்பவங்கள் நடந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
மாறப்போகும் வைகை கரை… ₹79.26 கோடி மதிப்பில் மாநகராட்சியின் மெகா திட்டம்…
8 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை டிஜிபி பாராட்டு
திருவாரூர் அருகே குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்…