திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் அனுமதிக்கு ரூ.100 கோடி லஞ்சம் : பி.டி. அரசகுமார் கைது…

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தர லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் புகார்களும் அளிக்கப்பட்டன.

புகார்களில் முறைகேடு, பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட ரு.100 கோடி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந் நிலையில், இந்த விவகாரத்தில் பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாக முத்துக்குமார் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இவர்களில் பி.டி. அரசகுமார் என்பவர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனத் தலைவர் ஆவார். இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். முத்துக்குமார் இவர் நடத்தி வரும் சங்கத்தின் பொருளாளர் ஆவார்.

இவர்கள் தவிர மேலும் சிலர் மீதும் வழக்குப் பதிவாகி இருக்கிறது. புகாரில் கூறப்பட்டு இருக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள், அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.