ரெய்டு வர்றவங்களை மந்திரி ஆக்கும் ஈனக் காரியத்தை தி.மு.க செய்யாது’: ஆர்.எஸ் பாரதி ஆவேசம்

சட்டப்பேரவையில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். மறுநாளே ரெய்டு வந்திருக்கிறார்கள், என தி.மு.கஅமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதல்வர் விஜய் எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்டார். அவருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார். சட்டப்பேரவையில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். மறுநாளே ரெய்டு வந்திருக்கிறார்கள்.

50 ஆண்டுகளாக இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன விஷயம். எங்கள் வீட்டுக்கு ரெய்டு வந்தவர்களுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கவில்லை. அந்த கேவலமான ஈனக் காரியத்தை தி.மு.க செய்ததில்லை.

இந்தப் பிரச்சினையை தி.மு.க சட்டப்படி சந்திக்கும். 1977-ல் இருந்து, எங்கள் மீது போடப்பட்ட எந்தவொரு வழக்கும் நிருபிக்கப்படவில்லை. வருமான வரித்துறை ரெய்டு வந்தபோது அவர் என்ன செய்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். 1977-ல் கருணாநிதியின் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, நான் கூடவே இருந்து பார்த்தவன். இப்போதுள்ள சின்னப் பசங்களுக்கு இது தெரியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.