மராட்டியாவில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்த நிலையில் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த யோகேஷ் பாட்டீல், கோடை விடுமுறையையொட்டி தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நேற்று காலை அவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் பால் வழங்க வந்த பால்காரர், நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் பதில் கிடைக்காததால் சந்தேகமடைந்தார்.
இதையடுத்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்த அவர், யோகேஷ் பாட்டீல் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை ஆய்வு செய்தபோது அவரது மனைவி மற்றும் 11, 9 வயதுடைய இரண்டு மகன்களும் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர். நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், யோகேஷ் பாட்டீல் தனது குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வீட்டிலிருந்து 22 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், பங்குச் சந்தை முதலீடு காரணமாக ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் அதிகரித்த கடன் சுமை குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் யோகேஷ் பாட்டீலுக்கு சுமார் 1.8 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்களின் உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை என்றும், தனது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அனைத்து கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

More Stories
ஜூலை 20 வரை உயிருடன் இருப்பேன்; பேரணி வெற்றிபெற வேண்டும்: சோனம் வாங்சுக் உறுதி
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்