பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றும் தனது சகோதரியிடம் பிரவீன் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளார். அதில் சிறுமியின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
பெங்களூருவில் 6 வயது சிறுமி ஒருவர் பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் கொலை வழக்காக மாறியுள்ளது. குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு ( Bangalore ) தேவனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்ற ஆசிரியர், சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் வழக்கறிஞரான பிரியங்காவுக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளான வெண்ணிலாவுக்கு வயது 6.
குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் பிரவீனும், பிரியங்காவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மூத்த மகள் தந்தையுடனும், இளைய மகள் வெண்ணிலா தாயுடனும் வசித்து வந்தார். இதற்கிடையே, தனது கல்லூரி பருவ காதலரான மோகனுடன் பிரியங்கா மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான மோகன் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி பிரியங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு, மோகன், பிரியங்கா மற்றும் வெண்ணிலா மூவரும் மதுரைக்கு சென்றுவிட்டு பெங்களூருவுக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது வழியில் சிறுமிக்கு பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் காரில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து படுக்க வைத்துள்ளனர். மறுநாள் காலை வெண்ணிலா உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில் உணவு நச்சுத்தன்மை காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த தந்தை பிரவீன், பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றும் தனது சகோதரியிடம் பிரவீன் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளார். அதில் சிறுமியின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காடுகோடி போலீசார், மோகன் மற்றும் பிரியங்கா மீது சந்தேகம் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த மரணம் கொலை என்கிற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையில், கடந்த ஆண்டு பிரியங்கா தனது 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விவகாரத்தில் மோகனின் உதவியை நாடியதாகவும், அதன்பிறகு இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் காசியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கணவர் பிரவீனுடன் பிரியங்காவுக்கு கருத்து வேறுபாடு அதிகரித்ததாகவும், இளைய மகளை தன்னுடன் அழைத்துச் சென்று மோகனுடன் வாழத் தொடங்கியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
விசாரணையில் வெளிவந்த தகவல்களின்படி, மோகனுடன் புதிய வாழ்க்கையை தொடர விரும்பிய பிரியங்காவுக்கு வெண்ணிலா இடையூறாக இருப்பதாக கருதப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக சிறுமியை அகற்ற திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ நாளில் காரில் இருந்தபோது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்த நிலையில் அவர் வேறொரு ஐஸ்கிரீம் கேட்டு அழுததாகவும், கோபத்தில் வயிற்றில் உதைத்ததாகவும் கூறியுள்ளார். சிறுமி சத்தமிட்டதால் வாயையும் மூக்கையும் அழுத்திப் பிடித்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், மோகனை காப்பாற்றுவதற்காக சிறுமி மாடியில் இருந்து விழுந்ததாக பிரியங்கா நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. தற்போது மோகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பிரியங்காவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட மரணம் என்று முதலில் கருதப்பட்ட இந்த சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை வழக்காக மாறியிருப்பது பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
சைலெண்டாக டிசிஎஸ் 50000 ஊழியர்களுக்கு டார்கெட்…
மாதம் ₹25,000 உதவித்தொகையுடன் அழகுக்கலை பயிற்சி – தாட்கோவின் சூப்பர் சான்ஸ்…
பாஜக பெண் நிர்வாகி குறித்து விமர்சனம்: யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் கைது…