இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம்…

கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம் நடத்திய நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்ததால் அப்பெண்ணின் சகோதரர் ஆணவப் படுகொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

தங்கை அபிசெல்வியின் காதலுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால் அண்ணன் சிவஞானம் அவரை ஆணவக்கொலை செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் எஸ்தர் பாலின் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்..

“தமிழ்நாட்டில் நாம் நினைப்பதைப் போல சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. திருநெல்வேலியில் நடந்த சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க எந்த எல்லைக்கும், அதாவது கொலை செய்யும் எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள்”

சாதிக்கு வெளியில் காதலித்து, திருமணம் செய்பவர்கள் பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு அளிப்பதாக அரசு சொல்கிறது, ஆனால், அப்படி ஏதும் நடப்பதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பான மனநிலை மாறாமல் இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன