கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் வரும் சனிக்கிழமையன்று தான் நடத்தத் திட்டமிட்டுள்ள தர்ணா போராட்டத்தை முன்னிட்டு, அபிஜித் தீப்கே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, போலி சான்றிதழ்களை வைத்துக் கொண்டு வேலைவாய்ப்பின்றி திரியும் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என ஒப்பிட்டுப் பேசினார். நீதிபதியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவரான அபிஜித் தீப்கே என்பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.
இந்தியாவில் இந்த இயக்கம் 2 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுடன் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயல்பட தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மூன்று முக்கிய சமூக ஊடகப் பிரபலங்களை தனது செய்தித் தொடர்பாளர்களாக அறிவித்திருக்கிறது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் வரும் சனிக்கிழமையன்று தான் நடத்தத் திட்டமிட்டுள்ள தர்ணா போராட்டத்தை முன்னிட்டு, அபிஜித் தீப்கே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இப்போராட்டத்திற்குத் தனது ஆதரவை அறிவித்த மறுநாளே இந்த அறிவிப்பு வெளியானது. கடந்த மாதம் வெளியான நையாண்டிப் பதிவு மூலம் சமூக ஊடகங்களில் திடீர் கவனம் ஈர்த்த இந்த அமைப்பு, தற்போது தனது கட்டமைப்பில் ஒரு முறையான பரிமாணத்தைச் சேர்த்திருப்பதற்கான தெளிவான அடையாளமாக, புலனாய்வுப் பத்திரிகையாளர் சௌரவ் தாஸ் ‘தலைமைச் செய்தித் தொடர்பாளர்’ பொறுப்பை ஏற்பார் என்று அறிவித்துள்ளது.
ரசியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான விஜேதா தஹியா மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் (IIT Kanpur) முன்னாள் மாணவரும், உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ‘மெக்கின்சி’யில் (McKinsey) பணியாற்றியவருமான அசுதோஷ் ரங்கா ஆகியோரும், தாஸுடன் இணைந்து செய்தித் தொடர்பாளர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்றும் கரப்பான் பூச்சி கட்சி தெரிவித்திருக்கிறது.
“பத்திரிகைத் துறையில் தனது பரந்த அனுபவத்துடன், தாஸ் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இணைகிறார். அவர் பல ஆண்டுகளாக முக்கியமான சட்ட, நீதித்துறை மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, பகுப்பாய்வு செய்து, செய்தி வெளியிட்டு வருகிறார். இந்தியா கேட்டில் நவம்பர் 2025-ல் நடந்த மாசுக் கட்டுப்பாட்டுப் போராட்டங்களை வழிநடத்தியவர்களில் தாஸும் ஒருவர்.
அரசியல் ஆராய்ச்சி மற்றும் உத்திசார் பகுப்பாய்வில் ஒரு வலுவான சாதனைப் பதிவின் ஆதரவுடன் தஹியா செய்தித் தொடர்பாளர் பொறுப்பை ஏற்கிறார். ஒரு எழுத்தாளர், உள்ளடக்க உருவாக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான தஹியா, அதிகம் விற்பனையாகும் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.
ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ரங்கா, லண்டனில் உள்ள மெக்கின்சி நிறுவனத்தில் உத்திசார் மேலாண்மை ஆலோசனைப் பணிக்கு மாறினார். அங்கு அவர் உயர்மட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு சிக்கலான செயல்பாட்டு மற்றும் பொருளாதார உத்திகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அவர் கடந்த ஆண்டு இந்தியா திரும்பியதோடு, ஜெய்ப்பூரில் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் இளைஞர் பிரச்சினைகள் சார்ந்த டோல் கா பாத், அமாயிரா தற்கொலை வழக்கு, நீட் தேர்வுத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பல மக்கள் இயக்கங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.” என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், “துறை அமைச்சர் ராஜினாமா செய்வதற்கு பதில், சிபிஎஸ்சி அதிகாரிகள் 2 பேரை சஸ்பென்ட் செய்திருப்பது வெறும் கண் துடைப்பு. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.இ விவகாரம் தொடர்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜுன் 6-ஆம் தேதி அமைதி போராட்டம் நடத்துவார்கள்.
தற்போதுள்ள அரசியல் முறையில் நிறைய குறைகள் உள்ளன. அதனால்தான் இளம் தலைமுறையினர் எங்களைப் போன்ற இயக்கத்திற்கு ஆதரவு தருகின்றனர். ஆளுங்கட்சி மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் கூட இளம் தலைமுறை அதிருப்தியாக உள்ளது” என்று தெரிவித்தனர்.

More Stories
விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள்…
என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” – தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு…
பயிற்சி பெற்ற ராணுவ விமானி காதலிக்கு ஹெலிகாப்டர் முன் மோதிரம் அணிவித்து ஆரவாரம்: