கரூர் அருகே கரும்புக்காட்டில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். திருச்சியில் தங்கி பழக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (40). இவர்களது மகன் விகாஷ் (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இருவரும், வெளியூரில் வேலை பார்த்து வருவதால் சிவரஞ்சனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் காலை 8 மணியாகியும் சிவரஞ்சனியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் சிவரஞ்சனி இல்லை. உடனே உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உறவினர்கள் அவரை தேடியபோது வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு காட்டில் சிவரஞ்சனி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த டிஐஜி சிபி சக்கரவர்த்தி, எஸ்பி ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் குறிஞ்சி, கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வயல் வழியாக சென்று அய்யர்மலை வலையபட்டி சாலையில் உள்ள குடிநீர்குழாய் அருகே படுத்துக்கொண்டது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அதில் கொலையாளி விட்டு சென்ற கைகடிகாரம் ஒன்று சிக்கி உள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து கொலையாளி யார்? சிவரஞ்சனி நகைக்காக ெகாலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
தகாத உறவை கண்டித்ததால் ராணுவ வீரர், மாமனார் கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது;
தூத்துக்குடியில் கல்லறை தோட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை…
விஜய் அரசின் முதல் பின்வாங்கல்! ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து…