தூத்துக்குடியில் கல்லறை தோட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை…

தூத்துக்குடியில் இரவில் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நண்பர்களுக்கிடையே போதை தகராறில் கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, முல்லை நகர் பகுதியில் சிஎஸ்ஐ கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தூத்துக்குடி சிப்காட் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் இறந்து கிடந்த வாலிபரின் கழுத்து மற்றும் தாடைப்பகுதியில் வெட்டுக் காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் அருகே காலி மதுபாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள் ஆகியவை கிடந்தன. இதனால் இறந்த நபர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது, ெதரியவந்துள்ளது. மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து மோப்பநாய் ‘ஜிஒ’ வரவழைக்கப்பட்டது.

அந்த மோப்பநாய் வாலிபர் இறந்து கிடந்த இடத்திலிருந்து கல்லறை தோட்டத்தின் நுழைவு வாயில் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. எனவே கல்லறை தோட்டத்தின் வாசலில் இருந்து கொலையாளிகள் காரில் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.இந்த கல்லறை தோட்டம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான ‘செம்பார்க்’ உள்ளது. இந்த பார்க்கில் உள்ள சிசிடிவி கேமிராக்களை சிப்காட் போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.