May 5, 2026

பாறாங்கல்லை தலையில் போட்டு கூலி தொழிலாளி கொடூர கொலை: வாலிபர் கைது…

திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாறாங்கல்லை தலையில் போட்டு கூலி தொழிலாளியை கொலை செய்த வாலிபரை கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர் கூலி தொழிலாளி. மாலை அங்குள்ள கடற்கரையில் சீனிவாசன், தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் போதையில் வந்து சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டதுடன் தனது ஆடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக சீனிவாசன் மற்றும் அவரது நண்பரை வெறுப்பேற்றும் வகையில் நடந்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், ஆகாஷை அடித்து விரட்டியுள்ளார். இதன்பின்னர் சீனிவாசன், அவரது நண்பர் ஆனந்தன் ஆகியோர் சென்றுவிட்டனர். இந்த நிலையில், சீனிவாசன் மதுஅருந்திவிட்டு வந்து இரவு 11 மணி அளவில் கடற்கரையில் உள்ள கோயிலில் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஆகாஷ், ‘’என்னையா அடித்தாய்’’ என்று கத்தியபடி அங்கு கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து சீனிவாசன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதை பார்த்து அவ்வழியாக சென்ற நபர் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆகாஷ் தப்பியோடியபோது பொதுமக்கள் வந்து அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருவொற்றியூர் போலீசார் சென்று சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்த ஆகாஷ் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்