புதிய கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை ?…உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குள் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதற்காக அவர் பெயரில் சமூக சேவை நற்பணி மன்றங்களைத் தொடங்கி வருகின்றனர்.

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை, கடந்த 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலையடுத்து தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அதிரடியாக பேசுவது, அன்றாடம் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பது, திமுகவின் ஊழல் பட்டியல்களை வெளியிடுவது என அரசியல் களத்தில் அண்ணாமலை பிஸியாகவே இருந்தார். இவரின் நடவடிக்கையால் கவர்ந்த இந்துத்துவா சிந்தனை கொண்ட இளையதலைமுறையினர் அண்ணாமலை ஆர்மி, அண்ணாமலை ரசிகர்கள் என்ற பெயரில் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் இயங்கினர். திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் மாற்று பாஜக தான் என்ற முழக்கத்தை அண்ணாமலை முன்னெடுத்தது தான் அவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்தது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியுடன் அவர் மோதல் போக்கை கையாண்டது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.  இதன் காரணமாக இவர்கள் இவருக்குள்ளும் உரசல் ஏற்பட்டது. அண்ணாமலையின் பேச்சால் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதனால், அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவில் எழுத்துவங்கின. அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான், பாஜகவுடன் அதிமுக உறவு என்ற முழக்கம் எழ ஆரம்பித்தது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கியடிக்கப்பட்டார். அவருக்குப் பதில் , அதிமுக முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக நியமனம் செய்தது. சைலண்ட் பார்ட்டியான நயினார் நாகேந்திரன், அதிமுக தலைவர்களுடன் நல்ல உறவில் உள்ளதால், வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், நயினார் நாகேந்திரனை ஓவர்டேக் செய்து இன்று வரை அண்ணாமலை தான் பேட்டி கொடுத்து மீடியா லைம் லைட்டில் உள்ளார். முக்கிய பதவியை எதிர்நோக்கியுள்ள அண்ணாமலை, பாஜகவிற்கு அக்டோபர் மாதம் கெடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி தன்னைக் கண்டு கொள்ளாவிட்டால், புதிய கட்சியை அவர் ஆரம்பிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் அண்ணாமலையின் பெயரில் அதாவது அண்ணாமலை தலைமை ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம் பெயரில் புதிதாக துவங்கி வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் இந்த மன்றத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அண்ணாமலை படத்துடன், தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார், மக்கள் தலைவர் என்ற அடைமொழியுடன் உறுப்பினர் சேர்க்கைக்கான செல்போன் எண்ணும் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை தனது ஆதரவாளர்களை அணி திரட்டும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், பாஜக தலைமையும் எதிர் கொள்ளப்போகிறது என்பது தான் அரசியல் வட்டாரத்தில் சுழன்றடிக்கும் கேள்வியாக உள்ளது.