1994ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அமைதிப்படை’. அக்காலகட்டத்தில் இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைதிப்படை அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகளை குறிப்பிட்டு எடுக்கப்பட்டது என்றும்; அவர்களை அப்பட்டமாக விமர்சித்து எடுக்கப்பட்ட படம் என்றும் சர்ச்சையானது.
மாபெரும் வரவேற்பு
இருப்பினும் “அமைதிப் படை” திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் அரசியல் நையாண்டி வசனங்கள், மேடை பேச்சை கடந்து எதார்த்த அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்த காட்டின.

32 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியிடுகிறார்.
‘அமைதிப்படை’ மீண்டும் வெளியாவதையொட்டி சென்னையில் நடந்த படவிழாவில் சத்யராஜ், கஸ்தூரி உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.
நாளை மீண்டும் “அமைதிப் படை”
இந்த நிலையில், ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘அமைதிப்படை’ நாளை முதல் மீண்டும் திரையரங்குளில் வெளியாக உள்ளது. தேர்தல் நேரத்தில் ‘அமைதிப்படை’ மீண்டும் வெளியாவதையொட்டி அப்படத்தில் வரும் காட்சிகளை தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன






