September 11, 2026

செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால், எச்1பி விசாவுக்காக கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. அதற்குக் கட்டணம் ரூ. 1.32 லட்சமாக இருந்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறை பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருபவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கியுள்ளார். இதற்காக அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார்.

இதன்படி ரூ. 1.32 லட்சமாக இருந்த எச்1பி விசா கட்டணம் தற்போது ரூ. 88 லட்சமாக (ஒரு லட்சம் அமெரிக்க டாலர்) பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று எச்1பி விசா. அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததை செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.