September 10, 2026

எச்சரிக்கை…சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயல்!

கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் வடக்கு. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து தெற்கு. தென்கிழக்கே 440 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு. தென்கிழக்கே 540 கி.மீ தொலைவிலும் நகர்ந்து வருகிறது

இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று ‘டிட்வா’ புயலமாக நேற்று உருவானது. இந்த புயல் வட தமிழகம் நோக்கி 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை- இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நேற்று ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது.

இதைத்தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடதமிழகம் புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் வடக்கு. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து தெற்கு. தென்கிழக்கே 440 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு. தென்கிழக்கே 540 கி.மீ தொலைவிலும் நகர்ந்து வருகிறது.

இது நவம்பர் 30-ம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி அதையொட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

You may have missed