ரூ.1 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை இணை ஆணையர், புரோக்கர் கைது…

தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது தோழி கிரிஜா.

ஜோதிலட்சுமி கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட அனைத்துக்கும் முறைகேடாக லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதே போல் கோயில் நிர்வாக அலுலர்களிடம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து முறைகேடாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. எப்போதும் ஜோதிலட்சுமியுன் உடன் இருக்கும் கிரிஜா ஆல் இன் ஆளாக இருந்து வசூலிப்பை கவனித்து வந்துள்ளார். மேலும் அவர் அரசு நிர்வாகங்களில் தலையிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம் பகுதியில் வள்ளியம்மை நாதர் திருக்கோயில் புதுப்பிக்கும் பணியில் நாகப்பட்டினம் ஒப்பந்ததாரர் மதியழகன் ஈடுபட்டு வருகிறார்.

இப்பணிக்கு நிதி வழங்குவதற்காக அவரிடம், தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி (47) ரூ.1 லட்சம் லஞ்சத்தை, புரோக்கரான கிரிஜாவிடம் (53) கொடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து ஒப்பந்ததாரர் மதியழகன் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.

போலீசார் ஆலோசனைப்படி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்ற மதியழகன், கிரிஜா மூலம் இணை ஆணையரிடம் ரசாயனம் தடவிய ரூ.1லட்சத்தை கொடுத்தபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். இது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.