September 10, 2026

கட்டிட வேலை செய்வதுபோல் நடித்து போதை பொருட்கள் விற்ற வடமாநில கும்பல் கைது:

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிலர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக தங்கி கட்டிட வேலை செய்வதோடு போதை பொருட்கள் விற்பனையிலும் ஈடுபடுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசியமாக அவர்களை கண்காணித்தனர். பின்னர், செல்போனில் தொடர்புகொண்டு போதை பொருள் வாங்கும் போல் நம்பவைத்து, போதை பொருளுடன் தாம்பரம் ரயில் நிலையம் அருகே வரவழைத்துள்ளனர்.

அதன்படி 3 பேர் தாம்பரம் ரயில் நிலையம் அருகே வந்ததும் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த 66 கிராம் ஹெராயின், 45 கிராம் மிக்சிங் பவுடர், 5 செல்போன்கள், 25 ஆயிரம் ரொக்கம பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது ஜனிப்கான் (26), துஷார் (19), ரகுமான் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் யார், யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You may have missed