புதுச்சேரி: சிறுவர்களின் பெற்றோர் மீது FIR… போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை…

புதுச்சேரி முழுவதும் முக்கிய சந்திப்புகள், பிரதான சாலைகள், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜூன் மாதம் முழுவதும் சிறப்பு போக்குவரத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை விபத்துகளை குறைப்பதற்கும், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனைகளின் போது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கிய 6,593 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்திய 3,162 பேரும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 384 பேரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 232 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டிய 174 பேருக்கும், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்களை பயன்படுத்திய 47 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிறார்கள் வாகனம் ஓட்டியதாக கண்டறியப்பட்ட 232 சம்பவங்களிலும், அந்தச் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு, சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பதன் சட்டரீதியான விளைவுகள் குறித்து விரிவாக அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், பெற்றோர் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்தது தொடர்பாக இதுவரை 4 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இனிமேலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாதவாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.