அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளை மூடக் கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை. இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இந்தக் கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா?’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரிப் போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்?
கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனிதப் பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல் துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?
பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது?. இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்?

More Stories
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்
‘நலம் TN’ இணையதளத்தை தொடங்கிய முதல்வர் விஜய்! நீங்களும் நன்கொடை தரலாம்…