திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணி மேற்பார்வையாளரை, பொது இடத்தில் வைத்து நபர் ஒருவர் தாக்கியதோடு, மாநகராட்சி ஊழியர்களை மிரட்டும் தோனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் என்ன?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 34-வது வார்டு மணியக்காரன்பாளையம் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடந்த குப்பையில், சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் இரண்டு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர்கள் தீயை அணைக்கும் பணிகளுக்காகக் காத்திருந்தனர்.

தவறான புரிதலால் நேர்ந்த தாக்குதல்
அப்போது அவ்வழியே காரில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், மாநகராட்சி ஊழியர்கள்தான் குப்பைக்கு தீ வைத்ததாகத் தவறாகக் கருதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மேற்பார்வையாளர் மகேந்திரனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை உடல்ரீதியாகவும் தாக்கியுள்ளார்.
வீடியோவில் சிக்கிய மிரட்டல்
இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஊழியர்கள், சக ஊழியர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட நபரின் வீட்டின் முன்பு திரண்டு நியாயம் கேட்டனர். ஆனால், அந்த நபரோ எவ்வித அச்சமுமின்றி, “வீடியோ எடுத்துக் கொள்.. உன்னால் முடிந்ததைப் பார்” என மிகவும் அலட்சியமாகவும், மிரட்டல் தொனியிலும் பேசியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மருத்துவமனையில் அனுமதி
தாக்குதலில் காயமடைந்த மேற்பார்வையாளர் மகேந்திரன், தற்போது சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு ஊழியர் பணி நிமித்தமாகச் சென்ற இடத்தில் தாக்கப்பட்ட சம்பவம், மாநகராட்சி ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஆதாரத்தை வைத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




