விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மத நல்லிணக்க கல்வித் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

கல்வித் திருவிழா

நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு சார்பில் மத நல்லிணக்க கல்வித் திருவிழா மற்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். முகமது ரபீக் தூராணி முன்னிலை வகித் தார். ஹனீப், குத்தூஸ்ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மத குருமார்கள் பங்கேற்பு:-

மேலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் அனைத்து மதங்களை சேர்ந்த ஆன்மீக தலைவர்களான திருவடிக் குடில் சுவாமிகள், அப்துல் காதர் பாகவி, மதுரை பேராயர் முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து ஆகியோர் ஒரே மேடையில் மாணவர்கள் மத்தியில் கல்வியின் சிறப்புகள், அதன் அவசியம் மற்றும் கல்வியால் ஏற்படும் சமூக மாற்றங்கள் ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய பஷீர் அக மது உள்பட 6 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள்

அதன் பின்னர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 2024 மற்றும் 2025ம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற நூர்ஜஹான் உள்பட 10, 12ஆம் வகுப்புகளை சேர்ந்த 57 மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசு, கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள், அரசியல் தலைவர்கள். டிரஸ்ட் போர்டு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.