இந்தாண்டு (2025) முக்கிய சின்னத்திரை நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு பல்வேறு ரீதியான தொந்தரவுகள் வரத்தான் செய்கிறது. அது சீரியல் படப்பிடிப்பு தளங்களிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், நடிகைகளுக்கு பல்வேறு ரீதியான பிரச்சனைகள் வருகிறது. பலர் எதிர்கொள்கிறார்கள்; சிலர் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கௌரி‘ சீரியலில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை நந்தினி. இப்பெண் நேற்று, பெங்களூருவில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது கடிதத்தில், நடிப்புத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் அவரை அரசு வேலையில் சேரவோ அல்லது திருமணம் செய்து கொள்ளவோ வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

2வது விஜய் டிவி நடிகை!

விஜய் டிவியில் புகழ்பெற்ற ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘சிறகடிக்க ஆசை’ போன்ற சீரியல்களில் நடித்தவர் ராஜேஸ்வரி. 39 வயதாகும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கும் இவரது கணவர் சதீஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பத் தகராறு காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

3வது நடிகை அமுதா

சன் டிவியில் ஒளிபரப்பான ​’கயல்’ சீரியலில் நடித்து வரும் துணை நடிகை அமுதா. 28 வயதாகும் இவர் கடந்த மே மாதம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். இதில் முக்கிய விசயம் என்னவென்றால், தான் தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகை அமுதா.

சின்னத்திரை உலகில், தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. நடிகர் சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இதுபோன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.