ஆந்திராவில் இருந்து புறப்பட்ட எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பயணி உயிரிழந்தார்.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி-துவ்வாடா பிரிவு வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 18189) சென்று பயணிகளுடன் சென்று கொண்ருந்தது. அப்போது அதிகாலை 1. 30 மணியளவில் ரயிலின் பேன்ட்ரி காரின் பின்னால் இருந்த பி 1 மற்றும் எம் 2 குளிர்சாதனப் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது.
ரயில் பெட்டியில் தீப்பிடித்ததைக் கண்ட லோகோ பைலட், உடனடியாக எலமஞ்சிலி நிலையத்தில் ரயிலை நிறுத்தி, தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். இருப்பினும், அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், இரண்டு குளிர்சானப் பெட்டிகளும் முற்றிலுமாக எரிந்து போயின. இந்த தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ரயிலில் உயிரிழந்தவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (70) என்பதும், அவர் விஜயவாடாவுக்குச் சென்று கொண்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த தீ விபத்தால் வால்டேர் பிரிவில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தீ விபத்தில் சிக்கிய ரயில் நான்கு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு அனகப்பள்ளி நிலையத்தை அடைந்தது. இந்த ரயில் விபத்து காரணமாக எலமஞ்சிலி வழியாகச் செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன





