செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று(டிச.1) சென்று கொண்டிருந்தது. அப்போது கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும் அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


