அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு குறித்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்த நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் இன்று சென்றார். அவரை தவெக நிர்வாகிகள் வரவேற்றனர். இதன் பின் விஜய் முன்னிலையில் தவெகவில் அவர் இணைந்தார். இதன் பின் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி சத்யபாமா உள்பட பலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், தவெகவில் ஏன் இணைந்தேன் என்று செய்தியாளர்களிட;ம் செங்கோட்டையன் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில்,” அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அதிமுக உருவான போது எம்ஜிஆர் உடன் சென்றவன் நான். புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன் . அதிமுக மீண்டும் ஒன்றனைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் .அது நடக்கவில்லை.என்னைத் திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி.நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்.
நேர்மையான ஆட்சியை கொடுக்க ஒருவர் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் . தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைவதற்காகவே தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தேன். தவெகவுக்கு வெற்றியை தர மக்கள் தயராக இருக்கிறார்கள் .2026-ம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும்.சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார். மக்கள் மனதில் விஜய் இடம் பெற்றுவிட்டார். பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் அப்பா, அம்மா விஜய்க்கு வாக்களியுங்கள் என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார். அமைச்சர் சேகர்பாவுவை நான் சந்திக்கவே இல்லை; திமுகவில் இருந்தோ, பாஜகவில் இருந்தோ யாரும் என்னை அணுகவில்லை. தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல” என்றார்.


