தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்து வரும் மழை காரணமாக 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவம்பர் 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் நேற்று இரவு முதலே விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் நாகப்பட்டினமை், கரூர், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி. மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


